தமிழ்நாட்டில் பொது திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி இலவசமாகும், துவரம்பருப்பு சீனி கோதுமை சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர். மேலும் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பொது விநியோக திட்ட பயனாளிகள் தங்கள் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி சான்று, தொலைபேசி எண் பதிவு ஆகியவை மேற்கொள்ள வரும் சனிக்கிழமை (14ஆம் தேதி) சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்ட அலுவலகங்களிலும், குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மற்றும் சென்னையை பொறுத்தவரை மண்டல அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படும். தமிழகம் முழுவதும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.
அதன்படி ஜூன் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 14.06.2025 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச்சான்று உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டம், ரேஷன் கார்டு அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. புதிதாக திருமணமானவர்கள், புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் பெயர் நீக்கம், சேர்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டால் தற்போது மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.