Header Ads Widget

<

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வரப்போகும் முக்கிய மாற்றங்கள்

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. அதைப்பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.  முதலாவதாக தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் வாயிலாக இலவசமாக, ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 20 கிலோ அரிசி, 3 கிலோ கோதுமையும் வழங்கப்படுகிறது. அதேபோல் 500 கிராம் சர்க்கரையும், துவரம் பருப்பு 1 கிலோவும், 1 லிட்டர் பாமாயில் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. ரேஷன் கார்டில் இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பவே இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களும் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் ரேஷன் அரிசியில் கல், தவிடு, வண்டுகள் இருப்பது போன்ற புகார்கள் ஒருசில இடங்களில் இருந்து வருகின்றன. இது மட்டுமின்றி துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் தரம் சில சமயங்களில் சரியாக இருப்பதில்லை எனவும் சில இடங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் சரியான எடையில் இல்லை எனவும் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு ரேஷன் கடைகளை நவீனமயமாக்கவும், பொதுமக்களுக்குத் தரமான பொருட்களை விநியோகிக்கவும் மிக முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோக முறையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள சில குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் சர்க்கரை மற்றும் துவரம் பருப்பு ஆகிய பொருட்கள் தனியாகப் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, சோதனை முறையில் விநியோகம் செய்யப்பட்டன. இந்தத் திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, இந்த நடைமுறையை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் மிக விரைவில் விரிவாக்கம் செய்யத் தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சர்க்கரை, துவரம் பருப்பு மட்டுமன்றி, ரேஷன் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையுமே பாதுகாப்பான முறையில் பாக்கெட்டுகளாக மாற்றி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.


*தமிழக அரசால் மிக வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் முதன்மையானது மகளிர் உரிமைத் தொகை திட்டம்' ஆகும். இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இத்தொகையை தமிழக அரசு ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ளது.அரசுத் தரப்பில் இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பயனாளிகள் பட்டியல் தயாரிப்பு போன்ற பூர்வாங்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்ட இந்த உரிமைத் தொகை முதலில் யாருக்குக் கிடைக்கும் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. தற்போது வழக்கமாக மாதந்தோறும் ரூ.1,000 பெற்று வரும் தகுதியுள்ள பயனாளிகளுக்கே இந்த உயர்த்தப்பட்ட தொகை முதலில் வழங்கப்பட உள்ளதாகத் கூறப்படுகிறது. ஏற்கனவே விண்ணப்பித்து, பல்வேறு காரணங்களால் தள்ளுபடி செய்யப்பட்டு, பின்னர் மேல்முறையீடு செய்த விண்ணப்பதாரர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இவர்களில் தகுதியானவர்கள் கண்டறியப்பட்டு, அடுத்தடுத்த கட்டங்களில் இப்பட்டியலில் இணைக்கப்படுவார்கள். வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் இந்த உயர்த்தப்பட்ட தொகை ரூ.2,500 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 *புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு விரைவில் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என்றும், புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் ஆன்லைன் மூலமாக மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

*ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு இனி அசல் குடும்ப அட்டையை (Ration Card) நேரில் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், கார்டின் மென்பிரதி அல்லது அட்டை எண் மட்டுமே போதுமானது என்றும் உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் லைசென்ஸ் மற்றும் ஆதாரை தங்களது ஸ்மார்ட்போனில் வைத்திருப்பதைப் போல, இனிமேல் ரேஷன் கார்டின் மென்பிரதியையோ (Soft Copy) அல்லது அட்டை எண்ணையோ ஸ்மார்ட்போனில் வைத்திருந்தால் போதுமானது. அதை ரேஷன் கடைகளில் காட்டி பொருள்களை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

*மேலும் ரேஷன் கடையில் கைரேகை பதிவு விழவில்லை என்றால், பதிவு கருவிழி (Iris) அங்கீகாரம், ஒரு முறை கடவுச்சொல் (OTP) அல்லது குடும்பத்தில் உள்ள வேறு நபரின் கைரேகையைப் பயன்படுத்திப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் கைரேகை வராதவர்களுக்காக முகம் மூலம் அடையாளம் காணும் (Face Authentication) புதிய முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.