தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி இலவசமாகவும் துவரம் பருப்பு, சீனி, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் ரூ.1000 பெறுவதற்கு புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.இந்நிலையில் உணவு பொருட்கள் சரியான எடையில் வழங்க வேண்டும் என்பதற்காக, ரேஷன் கடைகளில் எடைபோடும் எலக்ட்ரானிக் தராசை, பி.ஓ.எஸ்., மிஷினுடன் புளூடூத் வாயிலாக இணைத்து, எடை போடும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதனால், தராசில் எடை போடும் போது, அளவு குறையாமல் துல்லியமாக இருக்கும். இந்த நடைமுறை பயனாளிகளின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் பொருட்கள் வாங்க நீண்டநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி இருப்பதால், குடும்ப அட்டைதாரர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்; ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க இந்த நடைமுறை வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் புளூடூத் இணைப்பு தராசில் எடை போட, ஒரு கார்டுக்கு 5 - 10 நிமிடங்கள் வரை ஆகிறது. இதற்கு முன் பில் போட்ட பின், பொருட்கள் வழங்கப்பட்டன. தற்போது, பொருட்கள் வாங்கிய பின், பில் போடப்படுகிறது. ஒரு குடும்ப அட்டைதாரர்கள் நான்கு பொருட்கள் வாங்கும்போது பொருட்களின் அளவு, ஒன்றன்பின் ஒன்றாக தானியங்கி முறையில் பதிவு செய்யப்பட்டு, பில் பிரின்ட் எடுக்கப்படுகிறது. மேலும், இணையதளத்தில் பிரச்சனை இருந்தால் அதிக நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு, 5 - 10 பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனால், ரேஷன் கடைக்கு வந்தால், ஒரு நாள் முழுதும் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் மற்ற வேலைகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் இதில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்து, தாமதம் ஆகாமல் விரைவாக பொருள்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேணுமென கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலினை செய்து புதிய மாற்றம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.