Header Ads Widget

<

5 சவரன் நகை கடன் தள்ளுபடி எப்போது? வெளியான முக்கிய தகவல்!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்  நடக்கவுள்ள நிலையில் பல்வேறு கட்சியினர் தங்களுக்கு வாக்குகளை சேகரிக்க கவர்ச்சிகரமான திட்டங்களையும் வாக்குறுதிகளையும் வெளியிடுவார்கள். இதில் பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்ப்பது நகைக்கடன் தள்ளுபடியாகும். தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான விவசாயக்கடன், பயிர்கடன், நகைக்கடன், கறவை மாடு, சிறு வணிக கடன், கிணறு வெட்டுதல், ஆழ்துளை குழாய் கிணறு அமைப்பதற்கும், மூங்கில் வாங்குதல் போன்ற பல்வேறு கடன்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, கூட்டுறவு வங்கிகளும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும், தங்க நகை அடமானத்தில் கடன் வழங்குகின்றன. கடந்த சட்ட சபை தேர்தலின் போது, திமுக அறிக்கையில், தாங்கள் வெற்றி பெற்றால் கூட்டுறவு சங்கங்களில், 5 பவுன் வரை நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக  வாக்குறுதி அளித்தது.அதன்படி, கூட்டுறவு நிறுவனங்களில், 2021ஆம் ஆண்டு மார்ச் வரையிலான நகை கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதற்கான பயனாளிகளை தேர்வு செய்ய, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதனடிப்படையில், 14 லட்சத்து  51 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, 6,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.


இந்நிலையில், அடுத்த ஆண்டு 2026 சட்டசபை தேர்தலில், ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பல்வேறு கட்சியினர் அளிக்கும் தேர்தல் வாக்குறுதியில், 'நகை கடன் தள்ளுபடி' அறிவிப்பு இடம்பெறும் என எதிர்பார்த்துள்ளனர். அதனால், தற்போதே கூட்டுறவு நிறுவனங்களில், தங்க நகைகளை அடமானம் வைத்து, நகை கடன் பெறுவதற்காக, ஏராளமானோர் வங்கிகளுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக, பல மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில்  அதிக அளவில் நகை கடன் பெறுவதற்காக, பெண்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில் வங்கிகளில் பெறும் நகைக் கடனுக்கு ஈடாக கொடுக்கப்படும் தங்கத்திற்கான மதிப்பை உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கடனுக்கு நகையின் மதிப்பில் 85 சதவீதம் கடன் பெறலாம். மேலும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான கடனுக்கு நகையின் மதிப்பில் 80 சதவீதமும், ரூ.5 லட்சத்திற்கு மேலான கடன்களுக்கு நகை மதிப்பில் 75 சதவீதமும் பொதுமக்கள் இனி கடன் பெறலாம். இதுமட்டும் இல்லாமல் ரூ.2.5 லட்சம் வரை கடன் பெறுபவர்கள், அந்த கடனை திரும்ப செலுத்துவதற்கான கடன் மதிப்பீடு தேவையில்லை என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளன.இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.